வருவார்கள், சந்திப்பார்கள், போய்விடுவார்கள்… ஆனால், தீர்வு கிடைக்காது !

41 0
தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

நேற்று (09) உலக தமிழர் பேரவையினர் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக தமிழர் பேரவையினரை சந்தித்தபோது ஆறு திருமுருகன் மேலும் கூறியதாவது :

இன்று நீங்கள் எல்லோருமாக இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களைப் போல் பலர் இங்கே வருகை தந்து சந்திக்கிறார்கள். பின்பு போய்விடுவார்கள். ஆனால், எந்த முடிவோ எந்த தீர்வுமோ எட்டப்படுவதில்லை.

குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்கள் கூட நீங்கள் இருக்கும் கதிரையில் இருந்து என்னிடம் பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். நாங்களும் பல விடயங்களை கூறினோம். அவ்வாறே போய்விட்டார். எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி வேலைகளை செய்ய முடியாதுள்ளது. அங்கே பல இடர்ப்பாடுகள் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல காங்கேசன்துறை பகுதியை எடுத்துக்கொண்டால், எங்களுடைய சித்தர்கள் இருந்த இடங்கள், சமாதிகளை இடித்து, புராதன கோவில்களை இடித்து, ஜனாதிபதி மாளிகையினை கட்டிவிட்டு, இன்று அந்த இடத்தை வேறு யாருக்கோ விற்க முற்படுகிறார்கள். இதெல்லாம் பிழையான விடயம்தானே. ஏனென்றால், முதலில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போதுதான் எமக்கு ஒரு நம்பிக்கை வரும்.

தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத் தருவீர்கள் என்று இந்த விடயத்தை உடனடியாக கருத்தில் எடுத்து, இதனை செயல்படுத்த நீங்கள் முன்வாருங்கள், பார்ப்போம்.

அதேபோல இந்த பிரச்சினை தொடர்பில் அஸ்திரிய பீடத்தினர் கூட இங்கே வருகை தந்து ஆதினத்தை சந்தித்தபோது பல விடயங்களை எடுத்துரைத்தோம். ஆனால், அவை காற்றில் போய்விட்டன. அதேபோல நீங்களும் போகக்கூடாது. நீங்களும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.