6 தடவைகள் தமிழீழத் தேசியத்தலைவரை சந்திக்க முயன்றும் அது கைகூடவில்லையாம் என தேரர் தெரிவித்தாராம்!

39 0

யுத்த காலத்தில் மல்வத்து மகாநாயக்க தேரர் ஆறு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயன்றதாகவும் ஆனால், அந்த விடயம் கைகூடவில்லை என தம்மிடம் தெரிவித்ததாகவும் உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலை வழிபட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இலங்கைக்கு வருகை தந்து பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். அதேபோல மும்மத தலைவர்கள், மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.

கிறிஸ்தவ தலைவர்களையும் சந்தித்திருந்தோம். அவர்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும்; நடந்த போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்புக் கூறல் ஒரு முக்கியமான விடயம்; வெளிநாடுகளின் பிரேரணைகளை நிறைவேற்ற வேண்டியதும்  முக்கியமான விடயம் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பிரேரணை ஒன்றை  நாங்கள் ஜனாதிபதி மற்றும் ஏனையோரிடம் கையளித்திருக்கிறோம்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மதகுருமார்களுடன் ஒன்று சேர்ந்து 25 மாவட்டங்களுக்குச் சென்று இந்த பிரச்சினைளுக்கு ஒரு தீர்வினை, ஒன்றிணைந்து மக்களாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை நோக்கம்.

நாங்கள் அரசியல்வாதிகளை சந்திப்பதன் நோக்கம், இப்படியான வேலைத்திட்டத்தை நாங்கள் செய்கின்றோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு வெளிப்படையாக கூறுவதற்காகவே ஆகும். இதை குறை கூறக்கூடாது அல்லது குறை கூறும் அமைப்பாக எங்களை பார்க்கக் கூடாது.

குறிப்பாக, அரசாங்கத்தின் வேலைத்திட்டம் அல்லது பௌத்தர்களின் வேலைத்திட்டம் என்று குறை கூறக் கூடாது என்பதற்காக நாங்கள் அரசியல்வாதிகளுக்கும் திட்டத்தினை தெளிவாக கூறி, இதை மக்கள்மயப்படுத்துவதே எமது நோக்கம். மக்களே தீர்ப்பு கூற வேண்டும் என்பது எமது நோக்கம்.

அரசியல்வாதிகள் குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளையும் அதாவது கோட்டா தவிர ஏனையோரை சந்திக்கவுள்ளோம்.

பலதரப்பட்ட சமூகத்தினரை சந்தித்து வேலைத்திட்டத்தினை மக்கள்மயப்படுத்தி,  மக்கள் மத்தியில் வருகின்ற தீர்வுகள்தான் நிரந்தரமானதாக இருக்கும் என்றே நாங்கள் சிந்திக்கின்றோம்.

அஸ்கிரிய பீடத்தினை நாங்கள் சந்தித்தபோது மகாநாயக்க தேரர்,

‘சகோதரத்துவம், சமதர்மம், சமாதானம் என்ற அடிப்படையில் வேலை செய்தால் இலங்கை என்ற நாட்டில் பிரச்சினைகள் இருக்காது. அப்படி அரசியல்வாதிகள் செய்வதில்லை. நீங்கள் இப்படி மக்களிடம் செல்லப் போவதை நான் வரவேற்கிறேன். இதற்கு நான் நிச்சயமாக உறுதுணையாக இருப்பேன். அதனை நான் வெளிப்படையாகவே கூறி, ஆதரவு தருகிறேன்’ என்று கூறினார்.

அதேபோல மல்வத்து மகாநாயக்க தேரர், தான் போர்க்காலத்தில் கூட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்காக ஆறு தடவை அப்போதைய அரசாங்கங்களை கேட்டதாகவும், அதற்கு அரசாங்கம் விடாதிருந்தபோது, ஆறாவது தடவையாக பிரபாகரனை காண வேண்டும் என்று வவுனியா வரை தான் வந்ததாகவும், ஆனால் அது கைகூடவில்லை எனவும், போர்க்காலத்தில் கூட ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும், சமாதானத்தை கொண்டு வர வேண்டும் என்ற விடயத்தில் தாங்கள் ஈடுபட்டதாகவும், இப்படி மக்கள்மயமாகி அரசியல்வாதிகளை தவிர்த்து மக்கள் மூலமாக ஒரு தீர்வு வருவதற்கான நோக்கம், ஒரு நல்ல நோக்கம் தான். அதை தான் ஆதரிப்பதாகவும்  வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறி எங்களை வழியனுப்பினார் என்று குறிப்பிட்டார்.