பீடி இலைகளை கடத்திச் சென்ற இருவர் கைது

118 0

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி, ஏத்தாலை பகுதியிலிருந்து நாகவில்லு பகுதிக்கு கடத்த முற்பட்ட இருவரை கடற்படையினர் இன்று (07) அதிகாலை கைது செய்துள்ளனர்.

பீடி இலைகளை கடத்திச் செல்வதாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, புத்தளம் தேத்தாப்பலைப் பகுதியில் வைத்து படையினர் கெப் ரக வண்டியை மறித்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது 41 உரைகளில் சுமார் 1230 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதோடு, 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைதான இருவரும் புத்தளம் தில்லையடிப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 85 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியானவை என கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை  விசாரணையின்போது தெரியவந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம் ஆகியவற்றை நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, கைதான சந்தேக நபர்கள் இருவரையும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.