ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணையுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி அழைப்பு

135 0

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வடக்கு – கிழக்கு பகுதிகளில் பொலிஸார் நடந்துகொள்ளும் முறையானது நாட்டின் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளதுடன், அப்பாவி மனிதர்களின் உயிர்களை பலி எடுப்பதாகவும் உள்ளது.

அந்த விடயங்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படுவது இலங்கை முழுவதும் நடந்து வருகின்றது.

அந்த வகையில், வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இழைக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களால் நடாத்தப்படும் கவனயீர்ப்பு பேராட்டத்துக்கு கட்சி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

இலங்கை பொலிஸார் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகின்றார்களா எனும் சந்தேகம் எழுகிறது.

யாழ்ப்பாணம் சித்தங்கேணியிலும் ஓர் அப்பாவி இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார். இதே போன்று தான் வவுனியாவில் மாவீரர் நினைவு நாளில் அரசாங்க பாதுகாப்புத்துறை நடந்துகொண்ட விதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஊடகவியலாளர்களுக்கு இந்த நிலையெனில் அப்பாவி பொது மக்களுக்கு என்ன நிலை என்பதை உணர வேண்டியவர்களாய் இன்று தமிழ்ச் சமூகம் உள்ளது என்பதே உண்மையாகும்.

எனவே, 02.12.2023 சனிக்கிழமை (நாளை) வவுனியா பழைய பஸ் நிலையத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை பலப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளது.