மஹிந்த, ஜோன்ஸ்டன் பயணித்த ஜீப் மீது அதிவேக வீதியில் தடுப்பு வீழந்ததில் சேதம்!

28 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பயணித்த ஜீப் மத்திய அதிவேக வீதியில் குருணாகல் யக்கஹபிட்டிய பாதையிலிருந்து வெளியேறும் போது, கட்டணஞ் செலுத்தும் கருமபீடத்துக்கு அருகில் காணப்படும் தடுப்பு  வீழ்ந்ததில்  அவர்கள் பயணித்த ஜீப்  சேதமடைந்தமை தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (28) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த சொகுசு ஜீப்பின் முன்பக்க கண்ணாடியும் வாகனத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன.

மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் அநுராதபுரம் நோக்கிச்  சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்  குருணாகல் யக்கஹபிட்டிய வெளியேறிச் செல்ல முயன்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் ஆகியவை வெளியேறும் வாயிலைக் கடந்தவுடன், கட்டணஞ் செலுத்தும் கருமபீடத்துக்கு அருகிலுள்ள தடுப்பை அங்கிருந்த  ஊழியர்கள்  இறக்கியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.