ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் : ஆளும் தரப்பு வெட்கப்பட வேண்டும் – துஷார இந்துனில்

32 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழலை இல்லாதொழப்பதாக சர்வதேசத்திற்கு குறிப்பிட்டுக் கொண்டு  ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார், ஊழலை வெளிப்படுத்துபவர்களை புறக்கணிக்கிறார்.

ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதையிட்டு ஆளும் தரப்பு உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும். சம்மி, சாகல பற்றி பேசினால் செய்வதென்ன என்பதை ஜனாதிபதி காண்பித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள்,வனப்பாதுகாப்பு  அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வந்த விளையாட்டுத்துறை ,நீர்பாசனம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்  ரொஷான் ரணசிங்கவை ஒரு கடிதத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியுள்ளார்.

ரொஷான் ரணசிங்கவை பதவி நீக்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைந்து கைத்தட்ட முடியாது.ஆளும் தரப்பு  வெட்கப்பட வேண்டும்.நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு ஊழல் மோசடி பிரதான காரணம் என்று தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் குறிப்பிடுகின்ற நிலையில் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.ஜனாதிபதி தனது தற்றுணிவின் அளவை வெளிப்படுத்தியுள்ளார் என்றே குறிப்பிட வேண்டும்.

உகண்டா நாட்டின் முன்னாள் அதிபர் இடி அமீன் நாட்டு மக்களை சூறையாடி தம்மை வளப்படுத்தினார்.அதே போல் தான் இந்த ராஜபக்ஷர்களும் நாட்டை சூறையாடி ஒட்டுமொத்த மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள்.

ரொஷான் ரணசிங்க ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்பட்டார்.பொலன்னறுவை மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை புறக்கணித்து ராஜபக்ஷர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள்.ராஜபக்ஷர்களுக்காகவே  ரொஷான் ரணசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்.ஆனால் இன்று ரொஷான் ரணசிங்கவை ராஜபக்ஷர்கள் எவரும் பாதுகாக்கவில்லை,அவருக்காக குரல் கொடுக்கவுமில்லை.

கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா,தனது ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தொடர்பில் பேசினால் செய்வதென்ன என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.69 இலட்ச மக்களாணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அடிபணிந்துள்ளது.இன்று ரொஷான் ரணசிங்க வெட்டப்பட்டுள்ளார்.

ஊழலை இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி சர்வதேசத்திடம் குறிப்பிடுகிறார். மறுபுறம் ஊழல்வாதிகளை அடையாளப்படுத்தும் தரப்பினருக்கு எதிராக செயற்பட்டு,ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார். இதுவே ஜனாதிபதியின் உண்மை முகம்.ஜனாதிபதியினதும்,இந்த அரசாங்கத்தினதும் காலம் வெகுவிரையில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றார்.