சிந்தங்கேணி இளைஞன் படுகொலை : வழக்கு விசாரணை இன்று !

70 0

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞரின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) நடைபெறவுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞர் உயிரிழந்தமை, யாழ். நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது, சட்ட வைத்திய அதிகாரி, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றுமொரு இளைஞர் உள்ளிட்ட ஐவர் மன்றில் தோன்றி சாட்சியமளித்தனர்.

அதில் மூன்றாவது சாட்சியான உயிரிழந்த இளைஞருடன் கைதான மற்றைய இளைஞர் தம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர்களை குறிப்பிட்டு அடையாளம் காட்டியிருந்த நிலையில், இதன்போது மேலும் மூன்று பொலிஸாரை அங்க அடையாளங்களை குறிப்பிட்டு அடையாளம் காட்டியிருந்தார்.

சாட்சியான அந்த இளைஞர் அடையாளம் கூறிய ஐந்து பொலிஸாரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நீதவான் உத்தரவிட்டதையடுத்து, அவர்களில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து  நேற்று முன்தினம் சனிக்கிழமை (25) நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து, கைதானவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்தவும் பணித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளுடன் கைதான நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிறையில் உள்ளதால் அங்கு வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த வழக்கு இன்றைய தினம் பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது,