தமிழீழத்தில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் இன்றையதினம் நினைவேந்தலுக்கு ஏற்பாடு !

85 0

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதுடன் தடைகளைத் தாண்டி இன்றையதினம் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

அதற்கு அமைவாக, யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் துப்புரவுப்பணிகள் நிறைவடைந்து நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இதனைவிடவும், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக, மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக கடந்த 21ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், வடமராட்சி- நெல்லியடி மாலி சந்தி பிள்ளையார் கோவில் முன்பாக, மாவீரர் நினைவாலயம் பொதுமக்கள் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு பெருமளவானவர்கள் மாலையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இறுதி நாள் அஞ்சலிக்கான விசேட ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

இதேநேரம், மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைவிடவும், கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் விசேட நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  மேலும், திருகோணமலை ஆலங்குளத்தில் மாவீரர் நினைவேந்தலைச் செய்வதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்கள் சட்டத்துக்கு எதிரானதாக அமையும் பட்சத்தில் அவை தொடர்பில் பாராபட்சமின்றி குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வடக்கு,கிழக்கு மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் உள்ளிட்ட உரிய பணிப்புரைகள் மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சட்டத்துக்கு எதிரான முறையில் நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆகவே இவ்விதமான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் சட்டத்தினை மீறும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் கூறினார்.