ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏதேச்சதிகாரம் அதிகரிக்கின்றது – சட்டத்தரணிகள் அமைப்பு

42 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏதேச்சதிகாரம் அதிகரித்துவருவது குறித்து சட்டத்தரணிகள் அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் ஆணையின்றி ஆட்சிபுரியும் ஜனாதிபதியின் அதிகரித்துவரும் ஏதேச்சதிகாரம் குறித்து இலங்கையின் சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி குறித்த தீர்ப்பு உட்பட சமீபத்தைய பல நீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி  அரசியல் சாசனத்தால் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் ஆணையை இலகுவாக புறக்கணிக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியின் அதிகரித்துவரும் ஏதேச்சதிகாரம் குறித்தும் அதனால் நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்தும்  வர்த்தக சமூகத்தினரும் சர்வதேச நாணயநிதியம் உட்பட சர்வதேச சமூகமும் கருத்தில் கொள்ளவேண்டும் என சட்டத்தரணிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது அரசியல் எழுச்சிக்கு வழிவகுக்கலாம் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஜனாதிபதியின் ஏதேச்சதிகாரத்தை நோக்கிய போக்கு தொடர்ந்தால் பொருளாதார ஸ்திரதன்மை பாதிக்கப்படலாம் எனவும்  குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அரசமைப்பு பேரவையை அச்சுறுத்தும் ஜனாதிபதியின் சமீபத்தைய முயற்சிகளை சட்டத்தரணிகள் அமைப்பு கண்டித்துள்ளது.

நவம்பர் 23 ம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ஒரு ஏதேச்சதிகார நடவடிக்கையாக அரசமைப்பு பேரவையின் நோக்கத்தை திரிபுபடுத்தினார் அரசமைப்பு பேரவை ஜனாதிபதியின் கீழ் வருகின்றது என தெரிவித்தார் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.