யாழ். பல்கலையில் 3 விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு

53 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும் புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன், கலைப்பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் ஆகியோரை பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை இன்றைய சனிக்கிழமை (25) ஒப்புதல் வழங்கியது.

பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதன்படி, கலாநிதி ஈ.சி. ஜெயசீலன் தாவரவியலில் பேராசிரியராகவும், கலாநிதி கே.கண்ணன் கணிதவியலில் பேராசிரியராகவும், கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் கல்வியியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.