படுக்கையில் உயிரிழந்து காணப்பட்ட அம்பாறை வைத்தியசாலை வைத்தியர்!

49 0

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும்  வைத்தியசாலைக்கு திட்டமிட்டபடி வராததால் வைத்தியசாலையைச்  சேர்ந்தவர்கள்  அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைத்தனர். இருப்பினும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைத்தியசாலையைச் சேர்ந்த இரு தாதிகள், குறித்த டாக்டர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளனர்.

அதன்போது குறித்த வைத்தியர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர்  அம்பியூலன்ஸை வரவழைத்து அதன் மூலம் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அவரைப் பரிசீலித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.