தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

226 0

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பருவமழை பொய்த்ததாலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்ததாலும், வேளாண் செலவினங்களின் கடுமையான உயர்வு மற்றும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், தாங்க முடியாத மனவேதனையால், கடந்த 12 மாதங்களில் 400-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்துள்ளனர்.

அய்யாக்கண்ணு தலைமையில், எந்தக் கட்சியையும் சாராத நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு வந்து, இடுப்பில் அரையாடையுடன் கடந்த 14 நாட்களாக ஜந்தர் மந்தரில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு ரூ.39,565 கோடி நிதி உதவி கோரியது. ஆனால், அதிர்ச்சி அளிக்கின்ற விதத்தில், மத்திய அரசு வெறும் ரூ.1,658 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கின்றது. அதுவும், அடுத்த வேளாண்மைக்கான இடுபொருள்களை வழங்குவதற்காக மட்டுமே இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் எனத் தாங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். தற்போது, தமிழக விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கை என்னவென்றால், நாட்டு உடைமை ஆக்கப்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். 2014 பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது தாங்கள் அளித்த உறுதிமொழியின்படி, தென்னக நதிகள் இணைப்பிற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பவை ஆகும்.

கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் வேதனைகளைத்தான் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற 200 விவசாயிகள் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க விழைகின்றனர். தாங்கள் நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தால், தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.