ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்திடம் காவல்;துறை குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் சமூகமளிக்கவில்லை.
இந்தநிலையில் குற்றத் தடுப்புப் பிரிவின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் இன்று அவர் காவல்துறை குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.
இதன்போது மூன்று மணித்தியாலமாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு பசீர்சேகுதாவூத்திடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும் முகவரியற்ற புத்தகமொன்றை தனிநபர்களுக்கு சேறு பூசும் விதத்தில் வெளியிட்டமை தொடர்பிலேயே பசீர் சேகுதாவூத்திடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சட்டத்தரணிகளில் ஒருவர் பசீர் சேகுதாவூத்துடன் விசாரணைகளில் பங்கேற்றார்.
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும் நூலுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்,எச்,எம் சல்மான் ஆகியோர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்படொன்றை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

