கீரி சம்பாவிற்கான தட்டுப்பாடு

74 0

 நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு  எந்த  தட்டுப்பாடும் கிடையாது. அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட  செயல்பாடுகளே சந்தையில்  கீரி சம்பாவுக்கான தட்டுப்பாட்டுக்கு காரணமாகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீர தெரிவித்தார்.

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தேவையான அளவு கீரி சம்பா அரிசி கையிருப்பில் இருக்கின்றபோதும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை பதுக்கி வைத்துக்கொண்டு  சந்தைக்கு  விநியோகிப்பதை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அதன் காரணமாகவே கீரி சம்பாவிற்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது அரிசி மாபியாக்களினால் செயற்படுத்தப்படும் செயற்கை தட்டுப்பாடாகும்.

கடந்த சிறுபோகத்தில் கீரிசம்பா அறுவடை குறைவடைந்திருந்த போதும் அதற்கு முன்னர் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவடையின் போது பெருமளவு கீரி சம்பா கிடைத்துள்ளது.

அதனால்  போதுமான வகையில் கீரிசம்பா கையிருப்பில் இருக்கிறது. அத்துடன் இம்முறை பெரும்போகத்தின் போதும் அதிகமாக கீரி சம்பா உற்பத்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கியுள்ளேன் என்றார்.