அண்மைக்காலமாக இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய மீனவர்களை தாக்கி, அவர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றனர் என்ற தொனிப்பொருளில் இந்திய ஊடகங்கள், இந்திய மீனவ அமைப்புகள் உட்பட அண்ணாமலை அவர்களும் அதனை பூதாகரமாக பறைசாற்றி வருகிறார் என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (05) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்த விடயத்தில் இந்தியா ஒன்றை கவனிக்க வேண்டும். 1987 இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து இன்று வரை எமது கடலை கொள்ளையடித்துச் செல்பவர்கள் இந்திய இழுவை மடித் தொழிலாளர்கள். இந்திய இழுவை மடி தொழிலாளர்கள்தான் எங்களுடைய வாழ்வாதாரத்தை சூறையாடிச் செல்கின்றார்கள். இவ்வாறிருக்கையில், எமது மீனவர்களை கொள்ளையர்கள் என வர்ணிப்பது மிகவும் வேதனையான விடயம்.
ஏறக்குறைய நான் 55 வருடங்களாக கடற்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை வடபுலத்து மீனவர்கள் கடலில் கொள்ளையடித்ததாக வரலாறு இல்லை.
இந்த ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு இதை பெரிதாக கொண்டு போவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது.
சீனாவின் ‘காய் நகர்த்தல்’ மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. சீனர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள். இரு தினங்களுக்குள் சீன தூதுவர் வரவிருக்கிறார். அதுவும் கடல் வளங்களையும் கடலையும் ஆய்வு செய்வதற்கு வருகின்றார்.
இவ்வாறு வருகின்ற குழுவினர் இலங்கைக்கு சொந்தமான தீடைகளையெல்லாம் பார்வையிடப் போகின்றார்கள் என்று சொன்னால், இது இந்தியாவுக்கு பெரியதொரு தலையிடியாக இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா தனது வேலையையும் முடுக்கிவிட்டிருக்கிறது.
இந்தியா, கச்சதீவு பிரச்சினையை கையிலெடுத்து, கச்சதீவை வாங்கினால் பிரச்சினை முடிந்துவிடும் என்று ஒரு பக்கமும், கச்சதீவை வாங்கினால் கடல் கொள்ளையர்கள் பிரச்சினை இருக்காது என்று இன்னொரு பக்கமும் கூறுகிறது.
இந்திய பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் திரைமறைவில் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது எமக்கு உறுதியாக தெரியவில்லை. இருந்தும், இரு தினங்களுக்கு முன்னர் இங்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வந்த நோக்கமும் எதுவாக இருக்கும் என்று நாங்கள் சிந்தித்து வருகிறோம்.
அவர் வந்த இடமும் தெரியாது. போன தடவை தெரியாமல் போய்விட்டார். ஒரு மத்திய அமைச்சர் இன்னொரு நாட்டுக்கு வருவதாக இருந்தால் மாதக்கணக்கில் அவருக்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் செய்யப்பட்டு, தொடர்ந்து அறிவித்தல் விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை இவர் வந்த இடமும் தெரியாது. போன தடமும் தெரியாமல் போய்விட்டார்.
சிலவேளை, அவர் திரைமறைவிலே கொழும்பில் கச்சதீவு சம்பந்தமான சில விடயங்களையும் பேசியிருக்கலாம். அதைப் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. ‘நாங்கள் உங்களுக்கு பல கடன்கள் தந்திருக்கிறோம், பல உதவிகளை செய்திருக்கிறோம். கச்சத்தீவை ஒரு இணக்கப்பாட்டிலே விட்டுவிட்டு நாங்கள் விலகினோம். அதனை மீண்டும் தாருங்கள்’ என கேட்டிருக்கலாம்.
அல்லது ‘சீனாவுக்கு அம்பாந்தோட்டையை கொடுத்திருக்கிறீர்கள். அதேபோல கச்சதீவை எங்களுக்கு தாருங்கள்’ என கேட்டிருக்கலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர் வந்த நோக்கமும் அதுவாக இருக்கும் என எனக்குள் சந்தேகம் எழுகிறது.
இதற்கு முன்னுதாரணமாக இந்த கச்சதீவை கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவுக்கு வந்துவிட்டதோ அல்லது பரிசீலித்துக் கொண்டிருக்கிறதோ, தெரியவில்லை. இருந்தும் இந்தியாவின் வற்புறுத்தலை அல்லது அவர்களுடைய நெருக்குவாரத்தை தாங்க முடியாமல் சில வேளைகளில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு கச்சதீவை கொடுக்க நினைக்கலாம். அவ்வாறு கொடுக்க முற்படும்போது வடபுலத்து மீனவர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கான முன்னோடியாக அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலினூடாக அவர்களுடைய சூத்திரதாரியாக வடக்கிலே இருக்கின்ற ஒரு பிரமுகரை வைத்து, இந்த கடல் கொள்ளையை அல்லது கடல் அனர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என எனது ஊகம் சொல்கிறது.
இவ்வாறு பின்புலத்திலே பெரியதொரு பிரமுகர் இருக்கிறார். அவரை நம்பி சில தொழிலாளர்கள் கடலில் இறங்கி, இந்திய இழுவை படகுகளை தாக்கி, அதில் கொள்ளையடித்து அல்லது சில பொருட்களை எடுத்து வந்ததாக நாங்கள் சில மாதங்களுக்கு முன்னர் அறிந்தோம். இதுவும் அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகும்.
கச்சதீவை கொடுப்பதானால், அத்தருணம் இலங்கை மீனவர்கள் பாரிய எதிர்ப்பை தெரிவிக்கும்போது “நீங்கள் கடலிலே கொள்ளை அடித்தீர்கள். இந்திய மீனவர்களை தாக்கினீர்கள். அதன் காரணமாகவே இந்தியாவின் அழுத்தம் எங்களுக்கு அதிகமாக வந்தது. அதனாலேயே, இந்த கச்சதீவை கொடுக்க வேண்டியிருந்தது அல்லது கொடுக்க வேண்டிவரும்” என்ற கருத்தை கொண்டு வருவதற்காக இங்குள்ள சூத்திரதாரி இந்த வேலையை செய்திருக்கிறார் என தெரிவித்தார்.