பொதுஜன பெரமுனவின் ஆதரவில்லாமல் எவரும் வெற்றிபெற முடியாது என்கிறார் ரோஹித அபேகுணவர்தன

31 0

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் எவராலும் வெற்றிப் பெற முடியாது. எமது ஒத்துழைப்பை தவறாக பயன்படுத்தினால் அதன் விளைவு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

69 இலட்ச மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்கள் போராட்டத்தை கண்டு அச்சமடைந்து நாட்டை விட்டு வெளியேறினார்.

அரசாங்கத்தை பொறுப்பேற்க எதிர்க்கட்சிகள் முன்வராத காரணத்தால் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. யுத்தத்தை வெற்றிக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை ஒரு தரப்பினர் பிரதான அரசியல் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சிறந்த முறையில் வெற்றிக் கொண்டுள்ளோம்.கட்சி என்ற ரீதியில் பலமாக செயற்படுகிறோம்.

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் எவராலும் வெற்றிப் பெற முடியாது.

எமது ஒத்துழைப்பை தவறாக பயன்படுத்தினால் அதன் விளைவு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகவே தெரிவு செய்துள்ளோம் என்றார்.