பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்

167 0

கேகாலை பிளாண்டேஷனுக்கு கீழ் செயற்படும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதோடு அவர்களின் போராட்டங்களுக்கும் உரிய பதில் கிடைக்காதுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயற்படும் மலையக மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கொஸ்லந்த, மாகந்த பிரதேசங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த முறையில் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை கடந்த ஒரு மாத காலமாக கேகாலையில் நிறுவனமொன்றின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் கேகாலை பிளாண்டேசனுக்கு கீழுள்ள உடபுஸ்ஸல்லாவ, கெக்கஸ்வல்ட் அலகொல்ல கம்பஹா ஆகிய தோட்டங்களை சேர்ந்த 836  தொழிலாளர்கள் தமக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தொடர்பில் பதுளை உதவி ஆணையாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அது வெற்றியளிக்கவில்லை.

கொழும்பு தொழில் திணைக்களத்தில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது சரியான தீர்மானங்கள் எட்டப்படவில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட அழைப்பு விடுத்தோம். அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

அதற்கமைவாக தொழில் ஆணையாளர் குறித்த தோட்ட முகாமையாளர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் எதிர்வரும் 25 ஆம் திகதி நாளை மறுதினம் (நாளை) பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு கடிதம் அனுப்பட்டிருந்த போதிலும் சம்பந்தப்பட்ட தோட்ட முகாமையாளர்கள் நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி பெற்று தொழிலாளர்கள் தமது உரிமையை பெறும் நோக்கில் நிறுத்தி வைத்திருந்த வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

இது மனிதாபிமான அடிப்படையில் எமது மக்களுக்கு  இழைக்கப்படும் அநீதியாகும். எமது மக்களின் போராட்டங்களை புறக்கணித்து தொழில்சங்கங்களையும் மீறி செயற்படுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.