இராஜதந்திரிகள், பிரதமர் மோடிக்கான கடிதங்கள் இறுதியாகி உள்ளன இன்று கைச்சாத்தாகலாம்

167 0

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீட்டைக் கோரும் கடிதம் மற்றும் வடக்கு,கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந்திரிகளுக்கான கடிதம் ஆகியன இறுதியாகியுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்தாகுமென எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்தவதற்கான நேர ஒதுக்கீட்டைக் கோருவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் அதற்கான உத்தியோக பூர்வமான கடிதத்தின் வரைவு இறுதியாகியுள்ளது.

அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி ரி.சரவணராஜா உட்பட சமகாலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான தனித்தனியாக கடிதங்களும் இறுதியாகியுள்ளன.

இவற்றில் நாளையதினம் (இன்றையதினம்) அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பங்களை இடுவதற்கு கடந்தவாரம் நடைபெற்ற சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாக கட்சித்தலைவர்கள் கையொப்பங்களை இட்டு அப்பணி பூர்த்தியாகும் என்று எதிர்பார்கின்றேன் என்றார்.

எனினும், இந்தச் செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் குறித்த கடிதங்களை கையொப்பமிடுவதற்கான நேரம் மற்றும் இடம் ஆகியன இறுதியாகவில்லை என்று அதில் பங்கேற்கவுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.