நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது!

461 0

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தீடிரென பதவி விலகினார்.

குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளதோடு மட்டுமல்ல நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

குருந்தூர்மலை வழக்கு மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரங்களில் நீதியை நிலைநாட்ட உறுதித்தன்மையோடிருந்தார்.

அண்மை நாட்களில்  நீதிபதிக்குரிய காவல்துறைப் பாதுகாப்பு குறைக்கப்பட்டதோடு, அவர் சிறிலங்கா புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டார்.

நீதிபதிகள் எந்த அளவிற்கு உண்மையாகவும், நியாயமாகவும், விறுவிறுப்புடனும் கடமைகளைச் செய்கின்றார்களோ அப்போது மக்களால் வரவேற்கப்பவர். சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும். நீதி தெய்வீகத்தன்மை உடையதென மக்கள் கருதுகிறார்கள். இதனை தான் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவும் செய்தார்.

அவரின் தீர்ப்புகள் நியாயமானவைகளாகவும் , உண்மையானவைகளாவும் இருந்தன.

நீதி, சுதந்திரம், அதன் முக்கியத்துவம், நீதிபதிகளின் சிறப்பு, அவர்கள் சரியான முடிவுகளை வழங்குதல், சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லுதல் ஆகியவை நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாகும். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இவ்வாறே விளங்கினார்.

சிங்கள பேரின வாதத்தின் அச்சுறுத்தலால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி  விலகினார். நீதிபதிக்கே உயிர் அச்சுறுத்தல் என்றால். சாதாரண தமிழ் மக்களின் நிலை எப்படி இருக்கும்.?

சர்வ அதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றது சிறிலங்கா அரசாங்கம். ஈழத் தீவில் நிலவும் கொடூரமான நிலையை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்.