2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணிலுக்கே உண்டு!

44 0

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுவதாக நலன்புரி சேவைகள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”ஜனாதிபதியாக பிறிதொருவர் தெரிவு செய்யப்பட்டால் நிலையான பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சகல திட்டங்களும் பலவீமடையும். 2024 ஆம் ஆண்டு நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படும். எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அரசாங்கத்தை ஏற்க தயார் என்று தற்போது குரல் எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் கடந்த ஆண்டு நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட போது அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. நாடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிபந்தனை விதித்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எவ்வித நிபந்தனைகளுமில்லாமல் அரசாங்கத்தை பொறுப்பேற்றார். ஜனாதிபதியின் சிறந்த முகாமைத்துவ திட்டங்களினால் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. நிலையான பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு.நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஜனாதிபதியாக பிறிதொருவர் தெரிவு செய்யப்பட்டால் நிலையான பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சகல திட்டங்களும் பலவீமடையும். ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் புதிய அரசியல் கூட்டணி உதயமாகும். பலர் அரசியல் கூட்டணியில் ஒன்றிணைவார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.