கோர விபத்தில் சிக்கிய யுவதி மீட்பு

37 0

வாத்துவ – தல்பிட்டிய,  ரத்நாயக்க வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவைக்குள் நுழைந்த வேன் ஒன்று ரயிலுடன் மோதியதில் யுவதி ஒருவர்  காயமடைந்துள்ளார்.

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலிலேயே வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தை அடுத்து, வேன் ரயிலின் இயந்திர பகுதியில் சிக்கியது.

வேனின் வலது பக்கத்தில் இருந்தவர் பிரதேசவாசிகளால் பத்திரமாக மீட்கப்பட்டிருந்த போதிலும், சுமார் ஒரு மணிநேரம் ரயிலுக்கும் வேனுக்கும் இடையில் குறித்த யுவதி சிக்குண்டிருந்ததாக   எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர், பிரதேசவாசிகள் மற்றும் களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புத் பிரிவினரும் இணைந்து பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் யுவதியை மீட்டனர்.

பின்னர், விபத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வேனில் இருந்த இளம் ஜோடி காதலர்கள் என்றும், அவர்கள் கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததுடன், வேன் முற்றாக சேதமடைந்தது.

இது தொடர்பான விசாரணைகளை வாத்துவ பொலிஸின் ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.