பிரிகோஜின் மிகவும் திறமைவாய்ந்தவர் ஆனால் வாழ்க்கையில் பல பாரதூரமான தவறுகளை இழைத்தவர் என புட்டின் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவிற்கு வடமேற்கே இடம்பெற்ற விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு புட்டின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
எனினும் வாக்னர் குழுவின் தலைவர் உயிரிழந்தார் என்பதை புட்டின் உறுதி செய்யவில்லை.

விமானவிபத்தின் பின்னர் கிரெம்ளின் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடித்தது,தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான வீடியோ உரையிலும் புட்டின் இது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.
எனினும் புதன்கிழமை மாலை அது மாறியது.
விமானவிபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என புட்டின் ரஸ்யாவிற்கான தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
விமானத்தில் வாக்னர் ஊழியர்கள் காணப்பட்டனர் என புட்டின் தெரிவித்தார்.
உக்ரைனில் உள்ள நவநாஜி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற பொதுவான இலக்கிற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள் அவர்கள் என புட்டின் தெரிவித்தார்.
பிரிகோஜின் குறித்து கருத்து வெளியிட்ட புட்டின் 90களின் ஆரம்பம் முதல் அவரை எனக்கு தெரியும் அவர் குழப்பகரமான வாழ்க்கையை கொண்டவர் என குறிப்பிட்டார்.
பிரிகோஜினையும் அவரது படையினரையும் உக்ரைனில் அவர்களின் பங்களிப்பையும் புட்டின் பாராட்டினார்.
அவர் வாழ்க்கையில் பாரிய தவறுகளை இழைத்தார்,எனவும் தெரிவித்துள்ள புட்டின் எனினும் பிரிகோஜின் மரணத்தை உறுதிசெய்ய தவறியுள்ளார்.

