கடந்த 22 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இதுதொடர்பான மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆலை நிர்வாகம் தரப்பில் ரூ.4 ஆயிரம் கோடி ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆலையை திறக்க காலதாமதம் செய்தால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் பிரதான வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களும் ஆக.22 மற்றும் ஆக.23 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததால் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு கடுமையான பாதிப்பை இந்த ஆலை ஏற்படுத்தியுள்ளது.

