நெல் சந்தைப்படுத்தல் சபையின் விசேட அறிவிப்பு

40 0

நெல்லை கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு போதிய நிதி கிடைத்துள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

கடந்த பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 13 பில்லியன் ரூபாவை செலவிட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, இந்த ஆண்டு சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் ரூபாவை விவசாயிகள் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த தொகையை நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை செயற்பட்டதுடன், இதுவரை 300 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.

இதில் மேலும் 200 மில்லியன் ரூபா எஞ்சியுள்ள நிலையில், விவசாயிகள், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லினை விற்பனை செய்யாததால், பல மாவட்டங்களில் திறக்கப்பட்டிருந்த நெல் களஞ்சியசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அரசாங்கத்தால் அரச வங்கிகளில் இருந்து கடனாக மேலும் 750 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லினை விற்பனை செய்ய தயாராகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த நிதியினை பயன்படுத்தி நெல்லினை கொள்வனவு செய்ய முடியும் என நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.