இலங்கையில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் 85% மாணவர்களுக்கு எழுத்தறிவு மட்டம் குறைவு

135 0

இலங்கையில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் 85 வீதமான மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண் கணித அறிவை குறைந்தபட்ச நிலையிலேனும் எட்டவில்லை என UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலைமை குழந்தைகளின் இடைநிலைக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என UNICEF குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 3 வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டதனால், அல்லது இடைநிறுத்தப்பட்டமையினால் ஆரம்பப் பிரிவை சேர்ந்த 1.6 மில்லியன் பிள்ளைகள் கல்வியை இழந்துள்ளதாக UNICEF சுட்டிக்காட்டியுள்ளது.

கல்வி அமைச்சும் UNICEF நிறுவனமும் இணைந்து மாணவர்களுக்கு மூன்று வருடங்கள் தவறவிட்ட கல்விக் காலத்தை மீள வழங்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை 16ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த போது, இந்த விடயம் குறித்து வௌிக்கொணரப்பட்டது.