மன்னார் மாவட்டத்தை, எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

209 0

மன்னார் மாவட்டத்தை, எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி புகையிதர சேவை, எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் பங்கேற்று உரையாற்றிய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.

‘மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது, எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும்.

இந்தத் திருவிழாவை, தேசிய நிகழ்வாகக் கருதி, அதனைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது.

வருடாந்தம், மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும், அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மடு மாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

கடந்த வருடம், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து, மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர்.

அந்த கடினமான நிலைமையில், மடு மாதாவின் ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம், அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும்.

இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம், மன்னார் மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்க முடியும்.

பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே, இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது, இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல், தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு, நகர்சேர் கடுகதி புகையிரத சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க, நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

அவரின் வேண்டுகோளுக்கு அமைய, வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும், 2048 ஆம் ஆண்டளவில், அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம்.

அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.