கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி : சாரதி கைது

62 0
கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (04) இரவு வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் இருந்து அக்கராயன் நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் அக்கராயன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வேலு செல்வகுமார் என்பவரே (வயது – 40) படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.