முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைத்து வழங்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அமைத்து வழங்க வேண்டிய தேவை இருப்பதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் இந்திய அரசின் நிதி உதவித் திட்டத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்தும் வீடுகள் உடைந்தும் சுவர்கள் வெடிப்புக்கு உள்ளாகியும் காணப்படுகின்றன.
குறித்த வீடுகள் இவ்வாறு கானப்படுவதனால் குறித்த வீடுகளில் குடியிருக்க முடியாது ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் இந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து வழங்கப்பட்ட குறித்த வீடுகள் அனைத்துமே சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் நேரடியாகவும் பார்வையிட்டுள்ளனர்.
இந்த மக்களினுடைய கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு மட்டங்களில் நடைபெறுகின்ற கலந்துரையாடல்களிலும் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

