யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தனர்.
அவர்களை மறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி, இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த நில அளவை அதிகாரியால் தனக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு கூறப்பட்ட நிலையில் காணி உரிமையாளர், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காணி உரிமைக்கான மக்கள் இயக்க உறுப்பினர் இரத்தினசிங்கம் முரளிதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி கனைச்செல்வன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வசந்தகுமார் ஆகியோரால் ஒப்பமிட்டு கடிதம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக கடற்படைக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (25) கபிரியேல் பிள்ளை செல்வரத்தினம் என்பவருக்கு சொந்தமான 15 பேச்சஸ் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

