மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது கச்சேரிக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றில் ஆஜராகிய 4 பேரையும் சொந்த பிணையில் செல்ல அனுமதித்து எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆஜராகுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் பீற்றர் போல் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
கடந்த மாச் 30 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது அங்கு மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேச்சல் தரை காணிகளை தனியார் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு மாவட்ட செயலகத்திற்குள் எவரும் உள்நுழையவோ வெளிச் செல்லவோ விடாது வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் சட்டவிரோத ஒன்றுகூடல் மற்றும் மாவட்ட செயலக வாசலை வழிமறித்து அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தாக்குதல் செய்து அவர்களுக்கான நீதிமன்ற கட்டளையை வழங்கினர்.
இதனையடுத்து குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் திங்கட்கிழமை (24) விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது இந்த வழக்கில் ஆஜராகிய 4 பண்ணையாளர்களையும், சொந்த பிணையில் செல்லுமாறும் பொலிசாருக்கு வாக்குமூலத்தை வழங்குமாறும் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.
இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள் எந்தவிதமான ஆர்ப்பாடத்திலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும், அரசும் பொலிசாரும் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த வழக்கின் மூலம் புலப்படுகின்றது என்றனர்.

