தலையில் இரும்புக்கம்பி விழுந்து படுகாயமடைந்த பெண் இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதி

145 0

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் இராணுவ முகாமில் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் சிக்கி பெண் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் நேற்று திங்கட்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கற்கோவளம் இராணுவ முகாமில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த பெண் சிப்பாய் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

திருத்த வேலையின் போது இரும்புக் கம்பி தலையில் விழுந்ததில் அவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் மகியங்கனை பகுதியை சேர்ந்த டபிள்யூ. எம் .எஸ் .எம். விஜயசிங்க (வயது – 26) என்ற பெண் சிப்பாய் ஆவார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் அவர் கற்கோவளம் இராணுவ முகாமில் நேற்று திங்கட்கிழமை (17) நண்பகல் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தில் இருந்த இரும்பு கம்பி அவரின் தலை மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து படுகாயங்களுக்கு உள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.