தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் .

771 0

தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக, தமிழ் இளையோர்களை இலக்கு வைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் சிந்தனைகளை சிதறடிக்க இந்நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதன் நீட்சியாக ஒரு படி மேலே சென்று , தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் ,(23/09/2023) ஜேர்மனியில், திரு AR ரகுமான் அவர்களின் இசைநிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே இவை தொடர்பான விழிப்புணர்வை எமது உறவுகள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியமாகிறது

​யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் தியாகத்தை மூடி மறைக்க முயலும் சக்திகளின் சதிமுயற்சிக்கு துணைநின்று ,தமிழ்த் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்கும் சூழ்ச்சிகளை தெளிவாக இனங்கண்டு,முறியடித்து ,மாவீரர்களின் இலட்சியமான தமிழீழத் நோக்கிய விடுதலைப் பணிகளை முன்னெடுக்கும் கடமையுடன் அனைவரும் இணைந்து பயணிப்போம் .

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் ​

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரமும் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டர்

எமது தேசிய நினைவெழுச்சிக் காலங்களின் களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து, எமக்காக தமையீந்தவரை நினைவேந்திடுவோம்.இவற்றை புறந்தள்ள யார் நினைத்தாலும் அவர்களை மாவீரர் ஈகங்கள் மன்னிக்கமாட்டார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.