ஜயந்த கெட்டகொடவின் பிரேரணைக்கு எதிராக பெப்ரல் அமைப்பு உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

145 0

சிறிலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் மாநகரசபை சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் அரசிலமைப்புக்கு முரணாகும் .

அதனால்  அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடனும் மக்கள் அபிப்பிராய வாககெடுப்புக்கும் செல்லுமாறு தெரிவித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹண ஹெட்டியாரச்சி உயர் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (11) மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த சட்டமூலத்தின் 155ஆம் உறுப்புரைக்கு அமைய தற்போது கலைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் அதன் மக்கள் பிரதிநிதிகளை மீள அழைக்கும் அதிகாரம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டிருப்பதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய தேர்தல் ஒன்றை நடத்துவது அதிக செலவை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையாகும் என இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக  தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் சர்வஜன வாக்குரிமை மீறப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சட்டமூலம் விசேட பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் அனுமதித்துக்கொள்ள உத்தரவிடுமாறு மனுதாரர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.