தமிழக மாநிலம் கோவை சரக காவல்துறை டிஐஜி-யாக பணியாற்றி வந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (ஜூலை 7) காலை 7 மணி வரையில் சக காவல்துறை அதிகாரிகளுடன் பணி குறித்து பேசியுள்ளார். அதன் பிறகே தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் காவல் துறை துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார், கடந்த ஜனவரியில் பதவி உயர்வு மூலம் கோவை சரக டிஐஜி ஆனார். இந்நிலையில், அவரது இல்லத்தில் தனது கைத்துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரை சக போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தகவல். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா அல்லது குடும்ப பிரிச்சினையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பல்வேறு வழக்குகளை திறமையாகக் கையாண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் டிஐஜி விஜயகுமார் கைதேர்ந்தவர்.

