கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று புதன்கிழமை (28) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த காரின் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி – உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் உள்ளிட்ட மேலும் இருவர் உதயநகர் பகுதியிலிருந்து கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாகி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இடியன் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வன்முறை குழுக்களுக்கிடையே ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் இச்சம்பவத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம், என பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிளிநொச்சி தலைமையக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

