யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகில் தொலைபேசி திருத்தகம் ஒன்றில், கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (27) செய்யப்பட்டுள்ளார்.
திருத்தகத்திற்கு திங்கட்கிழமை (26) வந்த இளைஞன் அங்கிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றினை திருடி சென்றுள்ளார்.
அதனை கடை உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் கண்டதை அடுத்து, கண்காணிப்பு கமரா வீடியோ பதிவுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீடியோ பதிவு ஊடாக இளைஞனை அடையாளம் கண்டு, இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, திருடிய கையடக்க தொலைபேசியை தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், வாங்கியவரை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
குறித்த நபரிடம் கையடக்க தொலைபேசியை வாங்கிய நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் , கைது செய்யப்பட்டுள்ள நபரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

