சவூதி அரேபியாவில் நடைபெறும் உலக EXPO 2030 : புதிய சர்வதேச சாதனை

65 0

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர், பிரதமர் இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோரின் வளமான ஆட்சிக் காலத்தில் சவூதி அரேபியா பல்வேறு துறைகளிலும் நிகழ்த்திய மாபெரும் சாதனைகளின் வரிசையில் இன்னும் ஒரு புதிய சாதனை இணைந்துள்ளது. தலைநகரான ரியாத்தில் 2030 ஒக்டோபர் 1 முதல் 2031 மார்ச் 31 வரை EXPO 2030ஐ நடத்துவதற்கு ‘பியூரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் (BIE)’ நிறுவனத்துக்கு அதிகாரபூர்வ ஏலத்தை சமர்ப்பிப்பதன் மூலம் புதிய வெற்றியை பதிவு செய்தது.

சவூதி அரேபியா Expo 2030க்காக ரஷ்யா, தென் கொரியா, இத்தாலி மற்றும் உக்ரைன் உட்பட நான்கு நாடுகளுடன் போட்டியிடுகிறது. வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் BIEஇன் 173ஆவது பொதுச் சபையில், ‘ஒரு நாடு, ஒரு வாக்கு’ என்ற கொள்கையின் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பை பயன்படுத்தி நிகழ்வை நடத்தும் நாடு தேர்ந்தெடுக்கப்படும்.

 

சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க சர்வதேச ஆதரவைப் பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய விடயமாகும். 85க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சவூதியை ஆதரிக்கின்றன. அத்தோடு பல சர்வதேச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

“Expo 2030’ஐ நடத்துவதற்கான சவூதியின் திட்டங்கள் அலாதியானவை. ரியாத் நகரம் உலகின் மிகப் பெரிய பொது போக்குவரத்து வலையமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது. நியூயோர்க் நகரத்தின் ‘Central Park’ஐ விட 4 மடங்கு பெரியதாக ஒரு பசுமையான பச்சை வெளி ரியாத் நகர் மத்தியில் உருவாக்கப்படுகிறது. 15 மில்லியன் மரங்கள் நடப்படுகின்றன.

மேலும், ரியாத் ஒரு திறந்த கலைக்கூடமாக மாற்றப்பட்டு வருகிறது.

உலக முதலீட்டு மையமாக மாறுதல், பொருளாதாரத்தை எண்ணெயிலிருந்து விலக்கி ஏனைய துறைகளை மேம்படுத்தல், நிலையான உயர் தொழில்நுட்பத்தை நிறுவுதல், தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற சவூதியின் Vision 2030 திட்டங்களுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக இந்த Expo 2030 அமைகிறது. இந்த இலக்கை அடைய NEOM மற்றும் செங்கடல் திட்டம் போன்ற பெரிய திட்டங்களையும் இராச்சியம் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘மாற்றத்தின் சகாப்தம்: ஒன்றாக (எமது பூமியில்) ஒரு தூர நோக்குடனான எதிர்காலம்’ என்ற கருப்பொருள் தாங்கியே சவூதி அரேபியா Expo 2030இனை நடாத்த இருக்கிறது.

சர்வதேச கண்காட்சிகள் பணியகம் (BIE) ரியாத்தில் நடத்தப்போகும் இந்த Expo 2030ஆனது ராஜ்ஜியத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும். பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான், புத்தாக்கங்களை முக்கியத்துவப்படுத்தி, தனித்துவமான உலகளாவிய அனுபவத்தை வழங்கும் ஒரு Expo கண்காட்சியை நடத்துவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் மிகையான திறனை கொண்டிருக்கிறது என உறுதியளித்துள்ளார். உலகின் மாறிவரும் தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும் மற்றும் பல்வேறுபட்ட கலாசாரங்கள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தும் தளமாக BIEஇன் பங்கை சவூதி Expo 2030 மேலும் மேம்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

எதிர்கால சந்ததியினருக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, எதிர்காலத்துக்கான இராச்சியத்தின் இலட்சியப் பார்வையை பட்டத்து இளவரசர் வலியுறுத்தினார். 2022 மார்ச் 28இலிருந்து Expo 2030ஐ நடத்துவதற்கான விளம்பரப் பிரச்சாரத்தை இராச்சியம் தொடங்கியுள்ளது. சர்வதேச ஆதரவைத் திரட்ட அதன் இராஜதந்திர இயந்திரத்தை பயன்படுத்துகிறது.

Expo 2030க்கான ஏலம் மற்றும் அதனை நடாத்துவதோடு தொடர்பான முயற்சிகளை, ரியாத்தை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள ரியாத் நகரத்துக்கான ரோயல் கமிஷன் முன்னெடுத்து வருகிறது. கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள் தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி $200 பில்லியன் வரை கொண்டு, ரியாத் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ரியாத்தை உலகின் 10 பெரிய நகர்ப்புற பொருளாதார மையங்களுள் ஒன்றாக மாற்றுவதற்கும், Expoவை நடத்துவதற்கான சிறந்த வேட்பாளராக நிலைநிறுத்துவதற்கும் சவூதி அரேபியா பல திட்டங்களை உருவாக்கி வருகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் மனித குலத்தின் முன்னேற்றத்தை தொடர சிறந்த சிந்தனைகள், யோசனைகள் மற்றும் தீர்வுகளை ஒன்றிணைக்கும் உலக Expoவின் நோக்கங்களை செயற்படுத்துவதை சவூதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச கண்காட்சிப் பணியகத்துடன் இணைந்து world Expoவின் விதிவிலக்கான அல்லது ஒரு வித்தியாசமான வடிவத்தை ஏற்பாடு செய்ய சவூதி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நிகழ்வு நடத்துவதை பற்றி கலந்தாலோசிக்க IBE பிரதிநிதிகள் ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணத்தை ரியாத்துக்கு மேற்கொண்டனர்.

ரியாத் நகரத்துக்கான ரோயல் கமிஷனின் இயக்குநர்கள், குழுவின் தலைவரான பட்டத்து இளவரசர், பிரதமர் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரை பிரதிநிதிகள் சந்தித்தனர். உலக Expo 2030க்கான ராஜ்ஜியத்தின் வேட்புமனுவின் தொழில்நுட்பம் சார் அம்சங்களையும், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கூட்டங்கள் மற்றும் பட்டறைகளை நடத்துவது குறித்தும் இந்த குழு பேச்சுவார்த்தை நடாத்தியது.

கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் பெரும் விழாக்கள் நடத்துவதில் உள்ள அனுபவங்கள், அத்துறை சார் வல்லுநர்கள், இராச்சியத்தின் கட்டமைப்பு திறன்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் என்பன ‘Expo 2030’ஐ நடத்துவதற்கான சவூதி அரேபியாவின் திறனை உறுதிப்படுத்துவதாக அவர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

சவூதி அரேபியாவின் வருடாந்த விழாக்கள், கண்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள், திருவிழாக்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு சம்பியன்ஷிப் போன்ற நிகழ்வுகளின் வெற்றி, அத்துடன் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்சி மற்றும் சவூதி பசுமை முன்முயற்சி போன்ற முயற்சிகள், சவூதி Expoவை நடத்துவதற்கான வேட்புமனுவை மேலும் வலுப்படுத்துகின்ற அம்சங்களாக காணப்படுகின்றன. அத்தோடு, போட்டியிடுகின்ற ஏனைய நாடுகளை விட சவூதியை முதன்மைப்படுத்தும் காரணிகளாகவும் இவை இருக்கின்றன.