எம்எல்ஏ அருண்குமார் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு

252 0

ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு கோயம்புத்தூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் வருகையால் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கோயம்புத்தூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் வருகைக்கு பின் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு ஆதரவளிக்கும் எம்,எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் நட்சத்திர விடுதியில் இருந்து அருண்குமார் கடந்த மாதமே வெளியேறி தனது ஊருக்கு சென்று விட்டார். பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் கோயம்புத்தூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் கலந்து கொள்ளவில்லை.
ஓ. பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த எம்.எல்.ஏ. அருண்குமார் அ.தி.மு.க. கட்சி ஒரே குடும்பத்தின் கையில் உள்ளதாகவும், இதனை தன்னால் ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருவொற்றியூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பேசிய அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தற்சமயம் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அருண்குமார் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.