ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதம் நாளை

88 0

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டு மீதான விவாதம், நாளை புதன்கிழமை (21)இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான விவாதம் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

காலை 09.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன் மாலை  5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்குப் பிரேரிக்கப்படும்.அதனை தொடர்ந்து மாலை   05.00 மணி முதல் 05.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

நாளை புதன்கிழமை  (21) காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணிவரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு ஆகியவை தொடர்பான விவாதம் என்பன இடம்பெறவுள்ளன.அதனை தொடர்ந்து மாலை  05.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் வியாழக்கிமை  22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை  9.30 மணி முதல் காலை  10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மாலை 05.30 மணிவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023.06.01 திகதியன்று  நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஜூன் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லெரீன் பெரேரா, ரெஜினோல்ட் குரே,புத்திக குருகுலரத்ன, முத்து சிவலிங்கம் ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.