ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கான எந்த பொதுவான மகஜரிலும் நான் கையெழுத்திடவில்லை. எனது தனிப்பட்ட விண்ணப்பத்தை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து விட்டு திரும்புகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
போர்க்குற்ற விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் இலங்கைக்கு தேவை என்ற விடயத்தையும் ஐ.நா.வின் மனிதஉரிமைப்பேரவையின் 30.1 சரத்தின்படி சகல செயற்பாடுகளையும் பரிபூரணமாக இலங்கையில் மேற்கொள்ள வேண்டும் என தனிப்பட்ட கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன்.
சிலவேளை இலங்கைக்கு காலநீடிப்பு வழங்கினால் அது 3 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஐ.நா.மனிதஉரிமைப்பேரவையின் 30.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளை கிரமமாக பரிபூரணமாக செய்ய வேண்டும்.
அதனை கண்காணித்து அறிக்கை செய்ய இலங்கையில் ஒரு அலுவலகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
முறையாக அமுலாகவிட்டால் ஐ.நா.தனக்குரிய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி சிறப்பு பொறிமுறையினூடாக மக்களுக்கான தீர்வைப்பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோடீஸ்வரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.