பூஜையின்போது பெண் உயிரிழப்பு : லக்கல பொலிஸார் மேலதிக விசாரணை!

169 0

பூஜையின்போது திடீரென  சுகவீனமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  உயிரிழந்த சம்பவம்  லக்கல,  ஹத்தொட்டமுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  பெண்ணே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

லக்கல,   பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில்  சுகவீனமுற்றிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் குணப்படுத்துவதற்காக இந்த  பூஜை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது  பூஜை செய்தவர் மூவருக்கும் தலா 21 இளநீர்களை அருந்த கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, இளநீரை  அருந்திய பெண்களில் ஒருவர்  திடீரென  சுகயீனமடைந்த நிலையில் அவருக்கு மஞ்சள் நீரை அருந்த கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.