டென்மார்க் சேலன்டில் நடைபெற்ற மெய்ல்லுநர் போட்டி 2023

183 0

Sjælland மாலதி தமிழ்க் கலைக் கூடங்களுடன் மற்றும் அயல்நாட்டு Helsingborg மாலதி தமிழ்க் கலைக்கூடமும் இணைந்து நடாத்திய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமை 10.06.2023 அன்று Slagelse நகரில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
இந்த ஆண்டு Dianalund மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மெய்வல்லுநர் போட்டியின் தொடக்க நிகழ்வுகளாகக் கொடியேற்றம், இரண்டாம் லெப். மாலதியின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்யப்பட்டதுடன், மாவீரர்கள் மற்றும் மக்களுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இவற்றைத்தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளரின் சிறப்புரை இடம்பெற்றது. இதனையடுத்து தடகளப் போட்டிகள் விறு விறுப்புடன் தொடக்கி வைக்கப்பட்டன.
சிறுவர்கள் முதல் இளையோர் வரை மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியதைக் காணமுடிந்தது. பார்வையாளர்களுக்கான போட்டிகளிலும் 70 அகவை வரையிலானவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்களாக வருகை தந்திருந்த மக்கள் மிகவும் மனமகிழ்வுடன் கூடிக் கூலாவியதை உற்றுநோக்க முடிந்தது. இறுதியாகப் பங்குபற்றிய அனைத்துச் சிறார்களுக்கும் பதங்கள் அணிவித்தமை, எதிர்வரும் காலங்களிலும் அவர்கள் வெற்றிக்கான இலக்கை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையைக் கொடுத்து ஊக்குவிக்கும் என்பது திண்ணம். அத்துடன் வெற்றியாளர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. இம்மெய்வல்லுநர் போட்டிகளின் கண்காளிப்பாளர்களாக இளையோர்கள் செயலாற்றிருந்தமையும் மாலதி தமிழ்க் கலைக்கூட விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் இணைந்து கொண்டமையும் இந்நிகழ்வின் முத்தாய்ப்பாகும்.

இம் மெய்வல்லுநர் போட்டியானது, எமது இனத்திற்கான ஒருங்கிணைவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்த உறுதுணையாகவிருக்கின்றது என்றால் மிகையல்ல. சிறப்பு விருந்தினராக Slagelse Atheletik கழக நீண்ட காலப் பயிற்றுநராக பணியாற்றும் Per Andersan கலந்து சிறப்பித்தமை இந்நிகழ்விற்கு மேலும் வலுவாக அமைந்தது எனலாம். இறுதியாக எமது தாரக மந்திரத்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு கண்டது.