அராசங்கத்துடனோ அல்லது ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் தரப்பினருடனோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது. 2019க்கு முன்னர் காணப்பட்டதைப் போன்று நாட்டை மீண்டும் செழிப்பான நிலைமைக்கு மாற்றக் கூடிய இயலுமை தமது கட்சிக்கு மாத்திரமே காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திகாமடுல்லை பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசிய கட்சியல்ல. இது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மக்கள் சக்தியாகும். எனவே எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த அராசங்கத்துடனோ அல்லது ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் தரப்பினருடனோ நாம் இணையமாட்டோம்.
தற்போது எரிபொருள், பால்மா என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வரிசை இல்லை என்று பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை தற்போது காணப்படுகிறதா என்பது குறித்து சந்திக்க வேண்டும்.
2019இல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் தனவந்தர்களுக்கு 700 பில்லியன் ரூபா வரி சலுகையை வழங்கி நாட்டை வங்குரோத்தடையச் செய்தனர். அதே வேளை இன்று வங்குரோத்து நிலைமையை விட தற்போதைய நிலைமை நன்றாகவுள்ளது எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டை 2019க்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு மாற்றக் கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். விரைவில் நாட்டில் அந்த மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோம் என்றார்.

