நீதிபதிகள் உயர்ந்த குணங்களுடன் செயல்படுவது அவசியம்

380 0

மக்களின் மனித உரிமைகளை காப்பதே நீதிமன்றங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றுஇலங்கையின் புதிய தலைமை நீதிபதி ப்ரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 45 வது தலைமை நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட ப்ரியசாத் டெப் ​நேற்று கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமானால் நீதிபதிகள் உயர்ந்த குணங்களுடன் செயல்படுவது அவசியமென்று அவர் தெரிவித்தார்.

அரசியல் சாசனம் மற்றும் சட்டத்தை காக்க சகல நீதிபதிகளும் கடமை பெற்றுள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி இதன் முலம் மாத்திரமே பொது மக்கள் நீதிமன்றங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க முடியுமென்று கூறினார்.

வழக்கு விசாரணைகளின் போது ஏற்பட்டுள்ள தாமதங்களை தடுக்க உச்ச நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென்று கூறிய தலைமை நீதிபதி, வழக்கு விசாரனைகளின் போது புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை பயன்படுத்துவது அவசியமென்று தெரிவித்தார்.

அதேபோன்று வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்த காரணமாகவுள்ள சில சட்ட விதிமுறைகளுக்கு திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.