இந்திய எல்லையில் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது

226 0

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடல் எல்லையில் அத்து மீறி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் நெடுத்தீவைச் சேர்ந்தவர்கள் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்படை அதிகாரிகளால் நாகப்பட்டினம் அழைத்து செல்லப்பட்டு பின் அங்கிருந்து காரைக்கால் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முந்தினம் இந்திய மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.