உள்ளூராட்சி சபைத்தேர்தலை சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மைக்கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடாத்தும்படி மல்வத்து பீட மகா நாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதேவேளை, இன மற்றும் மத ரீதியான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் இது நல்லிணக்கத்துக்குப் பாதிப்பாக
அமையுமெனவும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் நேற்று முன்தினம் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார். அச்சந்தர்ப்பத்திலே பீடாதிபதிகள் இவ்வேண்டுகோளை அமைச்சரிடம்
முன்வைத்தனர்.
புதிய தேர்தல் முறைமையின் கீழ் சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமெனக்
கூறப்படுகிறது.
அவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படாவண்ணம் தேர்தலை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் என மல்வத்து பீட மகாநாயக்க தேரர் வேண்டிக் கொண்டார்