இலவச ரேஷன் அரிசியை வெளிச்சந்தையில் விற்றதால், கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றக் கிளையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் பலர் 2014-ல் தாக்கல் செய்த மனு: நாங்கள் விவசாயிகளிடம் நெல் வாங்கி அரிசியாக மாற்றி அரசிடம் வழங்கி வந்தோம்.
இதற்காக எங்களுக்கு அரசு வழங்கிய உரிமம் 2014-ல் ரத்து செய்யப்பட்டு, நாங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டோம். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ‘‘மனுதாரர்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச அரிசியை குறைந்த விலையில் வாங்கி, மீண்டும் அதை புதுப்பித்து கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளனர். இது குடிமைப் பொருட்கள் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்பட்டு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
மக்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய அரசு 2021-ல் குழு அமைத்துள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இலவச அரிசிக்காக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு அரசிடம் வழங்கப்படுகிறது. அரிசியாக மாற்றித்தரும் முகவர்களாக மனுதாரர்கள் செயல்படுகின்றனர்.
இதில், குடிமைப் பொருள்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.