நாவலர் கலாசார மண்டப விவகாரம்; யாழ்ப்பாண மேல்நீதிமன்றின் இடைக்கால கட்டளை நீடிப்பு

91 0

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் விதித்த இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இடைக்கால கட்டளையை நீடித்து உத்தரவிட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் ஆஜராகியிருந்தபோதே யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் ஏப்ரல் 4ம் திகதி இந்த இடைக்காலக் கட்டளையை பிறப்பித்து குறித்த வழக்கு இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிரகாரம் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரச சட்டவாதி தரப்பில் இடைக்கால கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இடைக்கால கட்டளையை மே 29ம் திகதி வரை நீடித்து அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார்