இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி(காணொளி)

271 0

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றத்திற்கும் தங்கி நின்றும் கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழங்காவில் இரணைமாதா நகரில் இருந்து கடந்த 02ஆம் திகதி இரணைதீவைச்சேர்ந்த 336 குடும்பங்கள் இரணைதீவிற்கு படகுகளில் சென்று இரணைதீவு புனித செபமாதா தேவாலயத்தில்  03ஆம் திகதி காலை நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் இரணைமாதா நகரிற்கு திரும்பியுள்ளனர்.

2009ம் ஆண்டின் பின்னர் மூன்றாவது தடவையாக வழிபாட்டிற்கு இரணைதீவிற்கு மக்கள் சென்று திரும்பியுள்ளனர்.

1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள குடும்பங்கள் இரணைதீவில் மீள்குடியேறவும் கடற்றொழிலில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் அவை மறுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் பூநகரி பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இரணைதீவில் மீள்குடியேறவும் தங்கி நின்று கடற்றொழில் புரியவும் அனுமதிக்குமாறு இரணைதீவு மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்