குரங்குகளுக்கு பதிலாக அரசியல்வாதிகளை ஏற்றுமதி செய்யுங்கள்!

97 0

குரங்குகளுக்கு பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை விஞ்ஞான ஆய்வுகளுக்காக ஏற்றுமதி செய்ய வேண்டும். அரசியல்வாதிகளின் மூளையை உணவிற்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர்களுக்கு மூளை கிடையாது என சுற்றாடல் துறை நிபுணர் நயனக ரன்வெல்ல அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாய பயிர்களுக்கு குரங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே அதை கட்டுப்படுத்த ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைக்கு குரங்குகளை வழங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதால் விவசாய பயிர்களுக்கு காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.

வன விலங்குகளின் வாழ்விட சூழல் அழிக்கப்படும் போது விலங்குகள் மனித நடவடிக்கைக்கு எதிராக செயற்படும்.வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்க அரசாங்கம் கொள்கை அடிப்படையில் உறுதியான திட்டங்களை வகுக்க வேண்டும்.

ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு தான் உண்மையில் வழங்கப்படுகிறதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.

சீனாவில் குரங்கு மூளையை கொண்டு சமைக்கும் உணவு பிரபல்யமானது. உணவு உற்பத்திகளுக்காக குரங்குகள் கோரப்படலாம்.

விஞ்ஞான ஆய்வு நடவடிக்கைகளின் இறுதி பரிசோதனைகள் குரங்குகளை கொண்டு முன்னெடுக்கப்படும். மூன்றாம் தலைமுறை ஆய்வுகளுக்கு குரங்குகள் பயன்படுத்தப்படும்.

மனிதனுக்கும் குரங்குகளுக்கும் அறிவியல் ரீதியில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஆகவே விஞ்ஞான ஆய்வு கூடங்களுக்காக குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

குரங்குகளுக்கு பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும்.மூளை உணவுகளுக்காக அரசியல்வாதிகளை பயன்படுத்த முடியாது.

ஏனெனில் அரசியல்வாதிகளுக்கு மூளை என்பதொன்று கிடையாது. அரசியல்வாதிகள் விஞ்ஞான ஆய்வுகளுக்காக பயன்படுத்தினால் நாட்டுக்கு ஏதும் பயன் கிடைக்கும் என்றார்.